Saturday, July 22, 2017

ரக்ஷா மந்திரம் - ஸ்ரீ ருத்திரம்

அழல்வண்ணன் பெருமானாம் முக்கண்ணன்
கழல் அடிகள் தொழுது நித்தம் ஏத்துவோமே!

வேள்வியினில் அவியதனைக் கொள்ளும் பெருமான்
கேள்வியினில் கல்வியினால் தெளியும் பெருமான்

தன் கண்ணால் மூவுலகம் சுட்டே எரிப்பான்
முன் மண்ணால் மாலவனும் காணாப் பெருமான்

அழித்தலுக்குக் கடவுள் அவனே உருத்திரன் என்பர்
விழித்தல் வேண்டாம் சிவனே எங்கள் படைகள் மீது !

தவம் செய்யும் ரிஷி முனிவர் புண்ணியர்களையும்
கோபம் கொண்டுன் முக்கண்ணால் பார்த்திடல் வேண்டாம்

எங்கள் நாட்டு குடிமக்கள் அரசர்களையும் மற்றும்
குதிரைப் படை காலாட்படை சேனைகளையும்

உந்தன் கோபக் கண்ணால் பார்க்காதே நீயும் தானே
எந்தன் சிரம் தாழ்த்திய வணக்கம் உனக்கு சிவ பெருமானே

பாரதத்தின் புதல்வர்கள் யாவர்களையும்
சேவகர்கள் தங்களையும் காத்திடல் வேண்டும்

பசு மாடுகள் கன்றுகளும் காளைகளையும் மேலும்
குதிரை யானை படைகளையும் காத்திடல் வேண்டும்

கோபக் கண்ணால் எல்லோரையும்  பார்த்திட வேண்டாம்
கோபம் தணிந்து குளுமையாகக் காக்க வேண்டுமே

உருத்திரனே பசுபதியே எங்கள் விண்ணப்பத்தை
க்ருத்துடனே ஏற்று எம்மைக் காக்க வேண்டுமே

அவிர்பாகம் தனைக் கொள்ளும் பரமேசுவரா
தவிர்க்காமல் வணங்கி நின்றேன் எம்மைக் காரும்

போரதுவும் வாராமல் எம்மைக் காருமே
போரதனில் வெல்ல உம்மருளைத் தாருமே

சிவ சிவ சிவ சிவ நீலகண்டனே!
பவ பவ பவ பவ  பரமேசுவரா !

No comments:

Post a Comment